உறவினர்கள் தந்த பணத்தில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்த அரசுப் பள்ளி ஆசிரியை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

உறவினர்கள் தந்த பணத்தில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்த அரசுப் பள்ளி ஆசிரியை!

ஏராளமாக பணம் செலவழித்து தனியார் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர்கள், எந்த வித கட்டணமுமின்றி கல்வி அளிப்பதுடன், பல வித பொருள்களை இலவசமாக அளிக்கிறது அரசுப் பள்ளி.


 ஆனால், அங்கே தங்கள் பிள்ளையைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை பலரும். இன்றைய சூழலில், தனியார் பள்ளிகளை விடவும், அரசுப் பள்ளிகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.


 ஆனபோதும், அது ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே செல்கிறது. அதைத் தடுப்பதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.


 அதனால், அப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அவ்வாறான ஆசிரியர்களில் ஒருவர்தான் கே.பெருந்தேவி.

தஞ்சை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ளது விளாங்குடி. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கே.பெருந்தேவி. அப்பள்ளியின் வளர்ச்சியில் அவர் எடுத்த முயற்சி எல்லோரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.


 அதுகுறித்து அவரிடமே கேட்டோம்.

``அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கவில்லை என்று புகார் சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும்போதாது என்பது எண்ணம்.


 அதனால் நம்மால் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். செய்தித்தாள்களில் கல்விச் சீர் கொடுக்கப்பட்டு, பள்ளிக்கான தேவைகளை நிறைவேற்றுவதைப் படித்தேன்.


அதுபோல எங்கள் பள்ளியிலும் செய்யலாம் எனத் திட்டமிட்டபோது, முதலில் நமது பங்களிப்பாக ஏதேனும் செய்துவிடலாமே என்ற யோசனை வந்தது. என் கணவரின் சித்தி, தான் படித்த பள்ளிக்கு உதவப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்


. `உங்க பள்ளிக்கும் செய்ங்க... அதேபோல எங்க பள்ளிக்கும் செய்யலாமே?' எனக் கேட்டபோது, அவரும் சம்மதித்து 50,000 ரூபாய் அளித்தார்.


 என் மாமனார் தன் பங்களிப்பாக 50,000 ரூபாய் தருவதாகச் சொன்னார். தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற என் அம்மா, 50,000 ரூபாய் கொடுத்தார். இவை எதுவுமே நான் எதிர்பாராதது. அதனால் ரொம்பவே உற்சாகமாகிவிட்டேன்.


 மொத்தமாக கிடைத்த 1,50,000 ரூபாயை மாணவர்களுக்கு முழுமையான பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்ற பொறுப்பும் வந்தது.

பள்ளியின் கட்டடங்களைச் சரிசெய்யலாம் அல்லது வண்ணம் பூசலாம் என்ற யோசனையைத் தள்ளி வைத்தேன்.


ஏனென்றால், நாம் செய்யவிருக்கும் மாற்றத்தால் கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் ஆர்வத்தைக் கொஞ்சமாவது தூண்ட வேண்டும். அதனால் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கலாம் என்று முடிவெடுத்தேன்.


இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. க்யூ ஆர் கோடு மூலம் பாடம் நடத்த, பாடப் புத்தகங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதை மொபைல் வழியாகச் செய்யும்போது பல மாணவர்களுக்கு முழுமையாகச் சென்று சேர்வதில்லை.


ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வந்துவிட்டால் அதே பாடத்தை பெரிய திரையில் நடத்தலாம் இல்லையா?

உடனே வேலைகளில் இறங்கினேன். மாடியில் இருக்கும் ஒரு வகுப்பறைக்கு தரையில் டைல்ஸ் ஒட்டினேன்.


 சுவர்களில் வண்ணம் பூசினேன். கம்ப்யூட்டர், புரஜெக்டர், ஸ்பீக்கர் உட்பட பொருள்களை வாங்கினேன். அவற்றைப் பொருத்தி, பாடம் எடுக்கையில் மாணவர்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம்.


 இந்தச் செய்தி ஊருக்குள் பரவியது. பலரும் இது பற்றிக் கேட்டார்கள். ஒருவர் யூ.பி.எஸூம், மற்றொருவர் இணைய வசதியும் வாங்கித்தந்தார்கள். நான் நினைத்தது நடந்துவிடும் அடுத்த ஆண்டு நிச்சயம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை வந்தது.


 இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்ததும், எங்களின் மற்ற உறவினர்கள் போன் பேசி நாங்களும் பணம் தருகிறோம் என்கிறார். அந்த வகையில் ஒரு லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது.


 இந்தப் பணத்தைக் கொண்டு வண்ணம் பூசி, மாணவர்களுக்குப் பிடித்த ஓவியங்களை வரையலாம் என்றிருக்கிறேன். அதற்கும் ஓவியக் கல்லூரியில் படித்த என் வகுப்பு நண்பரிடம் பேசியுள்ளேன்.

எங்கள் பள்ளியில் 110 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.


 அனைவருமே நன்கு படிக்கக் கூடியவர்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். அவர்களுக்கு இவை போன்ற வசதிகள் அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் என முழுமையாக நம்புகிறேன்" என்கிறேன் ஆசிரியை மே.பெருந்தேவி.

No comments:

Post a Comment