உழைப்பால் உயர்ந்த ‘விண்வெளி நாயகன்’ நினைவு தினம் இன்று அனுசரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 26, 2019

உழைப்பால் உயர்ந்த ‘விண்வெளி நாயகன்’ நினைவு தினம் இன்று அனுசரிப்பு

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடியரசு தலைவராக உயர்ந்து, அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்த ‘விண்வெளி நாயகன்’ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.



முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 1931, அக். 15ல் ராமேஸ்வரத்தில் படகோட்டியின் மகனாக பிறந்தார். ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்து திருச்சியில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.


பள்ளிப்படிப்பில் சுமாரான மாணவராக இருந்தவர், விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் சென்னை எம்ஐடியில் விமானவியல் படிப்பை முடித்து தனது கல்வித் தகுதியை வளர்த்துக்கொண்டார். தொடர்ந்து ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறினார்.


அக்னி ஏவுகணை சோதனைக்குப்பின் சர்வதேச அளவில் அறியப்பட்ட கலாம், இந்திய விண்வெளி துறையிலும் பல்வேறு சாதனைகளை படைத்து ஏவுகணை நாயகன் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

நாட்டின் தலைமகன்: நாட்டில் விவசாயம், மருத்துவத்துறை வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து சிந்தித்து வந்த கலாம், 2002, ஜூலை 25ல் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.


 தனது பதவிக்காலத்தில் வெளியூர் பயணங்களின்போது பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து நாட்டின் வளர்ச்சி, எதிர்கால இந்தியா குறித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த இவர் இளைஞர்களின் ரோல்மாடலாக விளங்கினார்.

இந்தியா வல்லரசாகும்:


நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தபோதும் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் எளிமையை கடைபிடித்து வந்ததால், ‘மக்கள் ஜனாதிபதி’ என்றே நாட்டு மக்களால் அழைக்கப்பட்டார்.


2020ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும் என்று கூறி வந்த கலாம், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்பும் ஓய்வு எடுக்கவில்லை.


நாடு முழுவதும் பயணம் செய்து மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து எதிர்கால இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளித்து உரையாடி வந்தார். 2015, ஜூலை 27ல் மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று உடல் நலம் பாதித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணமடைந்தார்.

நினைவிடத்தில் அஞ்சலி:


நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.


அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில், கலாம் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடை வளாகத்தில் அவரை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


இதில் தமிழக அமைச்சர்கள், விஞ்ஞானிகள் பலர் பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நூலகம் அமைக்கப்படுமா?
ராமேஸ்வரத்தில் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை சார்பில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு கலாம் வாழ்க்கை வரலாற்று தொகுப்பை அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள், சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவுசார் மையம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தம் தரும் விஷயமாகும். எனவே, நூலகம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment