வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 12, 2019

வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை

தேர்ச்சி சதவீதம் குறைய மாணவர்களின் வருகைப் பதிவு குறைவுதான் காரணம் என்பதால், மாணவர்கள் வருகைப் பதிவு  குறையும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ முடிவு ெசய்துள்ளது.


சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரில் பெரும்பாலானவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.


இதனால் சிபிஎஸ்இ வாரியம் கவலை அடைந்துள்ளது. தேர்ச்சி  சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தது.


பிறகு தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தது. தொழிற்கல்வி, பொதுப் பிரிவு பாடங்கள் என்று பிரித்து தேர்வுகளை நடத்தி வருகிறது. இப்படி பல மாற்றங்களை செய்தும் ஆண்டுதோறும் தேர்ச்சி வீதம் குறைந்து கொண்டே வருகிறது.


நாடு முழுவதும் இந்த நிலை நீடிப்பதற்கு என்ன காரணம்  என்று சிபிஎஸ்இ ஆய்வு மேற்கொண்டது.


அதன்படி, மாணவர்கள் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுப்பதுதான் காரணம் என்று கண்டறிந்துள்ளது. அதனால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த தற்போது வருகைப்பதிவுக்கு புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது.


குறிப்பாக, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் குறைந்த அளவே மதிப்ெபண் எடுப்பது, தோல்வி அடைவது ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்ள இது உதவும் என்றும் அறிவித்துள்ளது. அதற்காக, வருகைப் பதிவேடுகளை  பராமரிக்க புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.


அதில் முக்கியமாக கூறப்பட்டுள்ள விதியின்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக போதிய வருகைப் பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத  முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், நீண்ட நாட்கள் பள்ளிக்கு வர முடியாத நிலையில் இருந்தால் அதற்கான சரியான காரணம் தெரிவித்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். கடந்த 2019ம் ஆண்டு தேர்வு  முடிவுகளை கொண்டு சிபிஎஸ்இ ஆய்வு நடத்தியது.


அதில் பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதனால் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க முடிவு  செய்துள்ளது.


 மேலும், வருகைக் குறைவு குறித்து பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கும் ெபற்றோருக்கும் தெரிவிக்க வேண்டும். வருகைப் பதிவின்  முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும்.


அதற்கு பிறகும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாணவரையும், பெற்றோரையும் எச்சரிக்க வேண்டும்.

மேலும், மாணவர்கள் வருகை நாட்கள் குறித்த விவரங்களை ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஜனவரி மாதம்  கணக்கிட வேண்டும்.


வருகை குறைவான மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மண்டல அலுவலகத்துக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.


அதற்கு பிறகு வரும் விவரப்பட்டியல்களை  மண்டல அலுவலகங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, மாணவர்களின் வருகைப் பதிவை பள்ளிகள் கண்காணிக்க வேண்டும். வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாது என்பதால் மாணவர்களை பள்ளிக்கு வர வலியுறுத்த வேண்டும்.

அப்படி செய்யாமல்  தேர்வு எழுத அனுமதி கோரும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment