உள்ளாட்சித் தேர்தல்: திமுக புதிய மனு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 28, 2019

உள்ளாட்சித் தேர்தல்: திமுக புதிய மனு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய இடைக்கால மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் ஏற்கெனவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

 இந்நிலையில், இது தொடர்பான வேறு ஒரு வழக்கில், "அனைத்துச் சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கை டிசம்பர் 13-க்குள் வெளியிட வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி உத்தரவிட்டது


.இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய இடைக்கால மனுவில், "உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவகாரத்தில் வார்டு மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு, சுழற்சி நடைமுறை மற்றும் இதர சட்டத் தேவைகள் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு எதிர்த் தரப்பினரான தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும். அதன் பிறகே தேர்தல் நடத்தும் அறிவிக்கையை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.




உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் சி.ஆர். ஜெயசுகின், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த அக்டோபரில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் நடத்துவதில் நிலவும் தாமதத்துக்கான காரணங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது

. மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த மேலும் நான்கு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.


இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 18-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் வழக்குரைஞர்கள் நரசிம்மன், பார்த்திபன் ஆகியோர் ஆஜராகி, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டனர்.




இதற்கு மனுதாரர் ஜெய சுகின் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, "டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்' என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நரசிம்மன் தெரிவித்தார். அப்போது திமுக சார்பில் வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான வார்டு மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. ஆகவே, அதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்' என்றார்.


இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. அதற்குள், அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு அறிவிக்கை வெளியிட வேண்டும்


. இந்த விவகாரம் தொடர்பான விஷயங்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு உரிய அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்' எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment