ஏன் IAS படித்தீர்கள்?' - சார் ஆட்சியரை அசரடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 14, 2019

ஏன் IAS படித்தீர்கள்?' - சார் ஆட்சியரை அசரடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளிக்கு குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஐ.ஏ.எஸ் விசிட் அடித்தார். அப்போது, அந்தப் பள்ளியில் தனியார் பள்ளிகளைத் தாண்டி இருக்கும் வசதிகளைப் பார்த்து, ``வாவ், நான் இதுபோல் ஓர் அரசுப்பள்ளியைப் பார்த்ததில்லை.

இங்கு படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக கலெக்டராக முடியும்" என்று வாழ்த்தி பேச, அதைக்கேட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் நெகிழ்ந்துபோயிருக்கிறார்கள்.



கரூர் மாவட்டம், குளித்தலைப் பக்கமுள்ள பொய்யாமணியில் செயல்பட்டு வருகிறது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரான பூபதி, இதுவரை இருபது லட்சம் வரை ஸ்பான்ஸர்கள் மூலம் நிதிதிரட்டி, இந்தப் பள்ளியில் பல வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்.


ஏசி வகுப்பறைகள், பள்ளி வளாகம் முழுக்க உள்ள சுவர்களில் வண்ண ஓவியங்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி, கணினி ஆய்வகம், இயற்கை காய்கறித் தோட்டம், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தனித்திறமைகளை வளர்க்கத் தனி வகுப்புகள், மாணவர்களை ஈர்க்கும் வகையிலான நூலகம் என்று இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஏராளம்.


இதற்காக, இந்தப் பள்ளிக்கு சமீபத்தில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில்தான், 25 வயதில் ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கும், சென்னையைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரஹ்மான், குளித்தலை சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


வந்த வேகத்தில் இருந்து பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் அளவுக்குச் சிறப்பாகவும், துடிப்பாகவும் செயல்பட்டு வருகிறார். அவரைதான், பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள்.


அங்கே சென்ற சார் ஆட்சியர், அந்தப் பள்ளியில் உள்ள வசதிகளையும், அதனால் மாணவர்களுக்கு கிடைக்கும் சிறப்பான கல்வியையும் கண்டு வியந்தார். அவரிடம் மாணவர்கள், ``நீங்க எப்படி அல்லது ஏன் ஐ.ஏ.எஸ் ஆனிங்கண்ணே?" என்று கேட்டனர்.



அதற்கு பதிலளித்த அவர், ``நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒருமுறை எங்க பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக வந்தார். அவரைப் பார்த்ததும், எங்க ஆசிரியர்கள் மட்டுமின்றி, தலைமை ஆசிரியரும், அவருக்கு எழுந்து நின்று மரியாதைக் கொடுத்தனர்.


 அவரை பார்த்து வியந்தனர். 'ஆசிரியர்களே வியக்கும் அளவுக்கான ஐ.ஏ.எஸ் படிப்பை நாமும் படித்து பாஸ் பண்ணனும்னு முடிவு பண்ணினேன்.


அதற்காக, கடுமையாக முயற்சி, பயிற்சி பண்ணினேன். இப்போ உங்க முன்பு ஒரு ஐ.,ஏ.எஸ் ஆகி நிற்கிறேன்" என்றார். இன்னொரு மாணவனோ, "நீங்க ஐ.ஏ.எஸ் ஆக தேர்வு பெற்ற அறிவிப்பு வந்தபோது, உங்க மனநிலை எப்படி இருந்தது?" என்று கேட்டார்.

அதைக்கேட்ட ஷேக் அப்துல் ரஹ்மான், ``நான் கண்டிப்பாக ஐ.ஏ.எஸ் ஆகிவிடுவேன்னு முன்கூட்டியே மனதில் உறுதிபண்ணிகிட்டதால, எனக்கு பெருசா தெரியலை. ஆனால், 'நடுத்தரக் குடும்பத்துல பிறந்த நம்ம பையன், நம்ம பேரை காப்பாத்துற அளவுக்கு ஒரு ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டானே'னு என்னோட பெற்றோர் மகிழ்ச்சியடைஞ்சாங்க.


அதை எல்லார்கிட்டயும் சொல்லிச் சொல்லி பூரிப்படைஞ்சாங்க. அதைப் பார்த்ததும், எனக்கு கண்கலங்கிட்டு. உங்கள்ல பலரும் ஐ.ஏ.எஸ் ஆவீங்க. அதுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் பள்ளியா, இந்த பள்ளி இருக்கு" என்று உற்சாகப்படுத்தி முடித்தார்.


தொடர்ந்து ஆசிரியர்களைப் பாராட்டியதோடு, 'பள்ளிக்கு வேறு எதேனும் தேவைகள் இருக்கிறதா?' என்று கேட்டார். ஆசிரியர் பூபதி, "பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆசிரியர்கள் எங்க முயற்சியில் செஞ்சுட்டோம். ஆனா, பள்ளிக்கு மைதானம் இல்லை.

 இதனால், மாணவர்களை விளையாட்டில் மேம்படுத்த முடியவில்லை" என்று கோரிக்கை வைக்க, "விரைவில் உங்க பள்ளிக்கு மைதானம் கிடைக்க ஆவன செய்கிறேன்" என்று உறுதி கொடுத்துவிட்டு, கிளம்பினார்


நாம் சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் பேசினோம். ``கரூர் மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி ஊரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் இத்தனை வசதிகளானு நானே ஆச்சர்யமாயிட்டேன்.


 இதுபோல் ஓர் அரசுப்பள்ளியை நான் பார்த்ததில்லை. அந்தப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும், 100 சதவிகிதம் முழுஅர்ப்பணிப்போடு செயல்பட்டு, இத்தனை மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.


அங்கு படிக்கும் மாணவர்கள் 100 சதவிகிதம் நல்ல கல்வியை கற்கிறார்கள் என்பதை பள்ளியில் காலடி எடுத்துவைத்த நொடியிலேயே உணர்ந்துகொண்டேன்


மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அறிவுபூர்வமாக இருந்தது. நிச்சயம் அங்கே படிக்கும் மாணவர்களில் பலர் பெரிய நிலைக்கு செல்வார்கள். அவர்களுக்கு மைதானம் இல்லை என்பதால், அவர்களுக்கு தகுந்த மைதானம் கிடைக்க முயற்சி செய்ய இருக்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment