தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு முதல் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்
சென்னையில் நேற்று நடந்த தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் (இணைய வழி) முதல்வர் எடப்பாடி பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டில் குழந்தை இறப்பு விகிதம் 17ல் இருந்து 16 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரையில் 2030ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, அரசு எடுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளால் இப்போதே அடைந்து விட்டதும் ஒரு சாதனையாகும். தமிழகத்தில் 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகிறது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதை பெற்று வருகிறது.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன்படி சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகம், கோயம்புத்தூர் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை, புதுக்கோட்டை மற்றும் கரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் 700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன் துவக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அழுத்தம் காரணமாக மிக குறுகிய காலத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டிலுள்ள 3,250 மருத்துவ படிப்பு இடங்களுடன், 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 1,650 புதிய மருத்துவ பட்டப்படிப்பு இடங்களை சேர்த்து 2021-22 ஆண்டு முதல், மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவை மெய்ப்பிக்கும் வகையில் 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்க அரசு அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment