அரசு பள்ளி மாணவர்கள் 20 பேர் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு
இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில், அரசு பள்ளி மாணவர்கள், 20 பேர், மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைக்கும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில், இந்தாண்டு முதல், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அதன்படி, 405 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்டது.முதற்கட்ட கவுன்சிலிங்கின் போது, 399 இடங்கள் நிரம்பின. சுயநிதி கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, ஆறு பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பவில்லை.
சுயநிதி கல்லூரிகளில், கல்வி கட்டணம் கட்ட முடியாமல், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றனர்.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் என, முதல்வர் பழனிசாமி., அறிவித்தார். இதன் வாயிலாக மீண்டும் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைக்குமா என, மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 161 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பியுள்ளன. அதில், 12 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் கிடைக்கும்.
ஏற்கனவே, ஆறு இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மேலும், கல்லூரியில் சேராமல், இடைநிற்றல் காரணமாக ஓரிரு இடங்கள் என, சராசரியாக, 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
அனைத்து தகவல்களும் முழுமையாக கிடைத்த பின் தான், எவ்வளவு இடம் என்பது தெரிய வரும். அதனால், தற்போது கூறியுள்ள இடங்கள் மாறுபடவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment