6,344 பேருக்கு பரிசோதனை: 210 மாணவர்களுக்கு கொரோனா
சென்னையில், விடுதிகளில் தங்கியுள்ள, 6,344 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இதுவரை, 210 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள், மார்ச்சில் மூடப்பட்டன
.தொற்று குறைந்து வரும் நிலையில், 1ம் தேதி, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம், மீண்டும் செயல்பட துவங்கியது.
அன்று முதல், ஐ.ஐ.டி.,யில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி.,யில் மட்டும், 191 மாணவர்கள், பணியாளர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, அனைத்து கல்லூரிகளிலும், இரண்டு மற்றும் இறுதியாண்டு வகுப்புகள் துவங்கப் பட்டு உள்ளன. அதனால், சென்னை கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டர்.
அதன்படி, சென்னையில், நேற்று முன்தினம் வரை, 6,344 மாணவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்தில், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை மாணவர்கள் உட்பட, 2,498 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
; அதில், 200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல், வளசரவாக்கம் மண்டலத்தில், 5 பேர்; சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 3 பேர்; ஆலந்துார், பெருங்குடி மண்டலத்தில், தலா ஒருவர் என, 210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்யப்பட்டவர்களில், 3,773 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், 2,361 மாணவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருப்பதால், தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் உள்ள கல்லூரிகளில், இதுவரை யாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.
அதனால், அனைத்து கல்லூரிகள் மற்றும் விடுதிகளில், கிருமி நாசினி தெளித்தல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment