வாக்காளர் தகவல் சீட்டு எப்போது வழங்கப்படும்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 11, 2021

வாக்காளர் தகவல் சீட்டு எப்போது வழங்கப்படும்?

 வாக்காளர் தகவல் சீட்டு எப்போது வழங்கப்படும்?


வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாள்களுக்கு முன்னரே வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நடைபெறவிருக்கின்ற, 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது


வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.


1. ஆதார் அட்டை

2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை;

3. வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய) ;

(அ) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை;

(ஆ) ஓட்டுநர் உரிமம்;

(இ) நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை);

(ஈ) தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;

(உ) இந்திய கடவுச்சீட்டு;

(ஊ) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

(எ) மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,

(ஏ) பாராளுமன்ற/ சட்டமன்ற/ சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கபட்டுள்ள அலுவலக அடையாள அட்டை


மேலும், புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக அனைத்து வாக்காளர்களின் வசதிக்காக வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி மையம், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் வரிசை எண், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 


மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும். எனினும், வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


ஒரு வாக்காளர் வேறொரு சட்ட மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.


 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்திவிட முடியாது. 

அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளார் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment