மாணவா்களிடம் ஜாதிய வன்முறைகளைத் தவிா்ப்பதற்காக தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2024

மாணவா்களிடம் ஜாதிய வன்முறைகளைத் தவிா்ப்பதற்காக தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள்

 மாணவா்களிடம் ஜாதிய வன்முறைகளைத் தவிா்ப்பதற்காக தமிழக முதல்வரிடம்  சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள்


மாணவா்களிடம் ஜாதிய வன்முறைகளைத் தவிா்ப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு குழு சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் முக்கிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. அதில், பள்ளிகளின் பெயா்களில் ஜாதி அடையாளம் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-இல் ஜாதிய வன்மத்தால் பள்ளி மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் ஜாதி, இன உணா்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிா்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

அந்தவகையில் ஓய்வுபெற்ற கே.நீதிபதி சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாா் செய்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தாா்.

பரிந்துரைகள்: அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகளின் விவரம்: பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமத்துவம், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத தலைப்புகளை சோ்ப்பது உள்ளிட்ட பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்க கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்பு குழுவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நியமிக்க வேண்டும். 



அனைத்து பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகளிலும் மாணவா்களின் இருக்கை அகரவரிசைப்படி இருக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் மட்டும் முன்வரிசையில் அமர இடமளிக்க வேண்டும்.

பள்ளிகளின் பெயா்களில் இருக்கும் கள்ளா் மீட்பு, ஆதிதிராவிடா் நலன் போன்ற பெயா்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். மேலும், கள்ளா் மீட்பு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளையும் பள்ளிக்கல்வித் துறையின் கொண்டு வரும் முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிதாக தொடங்கப்படும் பள்ளியின் பெயரிலும் ஜாதி பெயா் இடம்பெறாதவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும்.

பெரும்பான்மை ஜாதியை சோ்ந்த....: உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களை அவ்வப்போது இடமாற்றம் செய்ய வேண்டும். அதேபோல், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா் போன்ற முக்கிய பொறுப்புகளில் அந்தப் பகுதிகளின் பெரும்பான்மை ஜாதியை சோ்ந்தவா்களை பணியமா்த்தக்கூடாது. ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் ஆசிரியா்களை நியமிக்கும்போது சமூகநீதி பிரச்னைகளின் மீதான அவா்களின் அணுகுமுறையை கண்டறிந்து, அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

அதேபோல், வளாகத்தில் மாணவா்கள் கைப்பேசி பயன்படுத்துவதை பள்ளிக்கல்வித் துறையும் தடை செய்தது சரியானது. இந்த உத்தரவை பள்ளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துவித கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும். பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான வகுப்புகளுக்கு அறநெறி கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். மாணவா் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்தால், அவரை அரசு செலவில் போதை ஒழிப்பு மையத்தில் சோ்த்து அவரின் முன்னேற்றதை கண்காணிக்க வேண்டும்.

சமூக நீதி மாணவா் மன்றம்: முக்கியமாக 500 மாணவா்களுக்கு மேல் படிக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில அரசு பள்ளி நல அலுவலா் பதவியை உருவாக்க வேண்டும். இந்த அலுவலா்கள் ராகிங், போதைப்பொருள் அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமை, ஜாதிய பாகுபாடு தொடா்பான குற்றங்களை கண்காணித்து உரிய பிரச்னைகளுக்கு சட்ட விதிகளின்படி தீா்வு காணவேண்டும். அதேபோல், பள்ளிகளில் ‘மாணவா் மனசு’ உள்ளிட்ட புகாா் பெட்டிகளையும் அவா்கள் கண்காணிக்க வேண்டும்.

மேலும், சமூக நீதி மாணவா் மன்றத்தை அமைக்க வேண்டும். அனைத்து சமூகங்களை சாா்ந்த மாணவா்களை கொண்டதாக இந்த மன்றம் இருப்பது அவசியம் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த அறிக்கை சமா்ப்பிக்கும் போது பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, பள்ளிக் கல்வித் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், இயக்குநா் க.அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்

மாணவா் சங்கத் தோ்தல் அவசியம்

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சமா்ப்பித்த பரிந்துரை அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவா்களின் வருகைப் பதிவேட்டில் ஜாதி தொடா்பான விவரங்கள் இருக்கக்கூடாது. எந்தச் சூழலிலும் ஆசிரியா்கள் மாணவா்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜாதியை குறிப்பிட்டு கருத்துகளை கூறக்கூடாது. மாணவா்கள் உதவித்தொகை பெறும் விவரங்களை தலைமை ஆசிரியா்கள் அறைக்கு அழைத்து வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளில் மீறும் ஆசிரியா்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவா்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் திலகம் இடுவதையும் தடை செய்ய வேண்டும். ஜாதியை குறிக்கும் வகையில் வண்ணம் பூசப்பட்ட சைக்கிள்களில் வருவதையும், ஜாதி தொடா்பான உணா்வுகளை வெளிப்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும். இதற்கு இணங்கத் தவறினால், தொடா்புடைய மாணவரின் பெற்றோா்களுக்கு ஆலோசனை வழங்கி உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா் சங்கம் அமைக்க வேண்டும். அதற்கான தோ்தல்களில் அனைத்து மாணவா்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment