மாற்றுச் சான்றிதழ் விவரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 19, 2024

மாற்றுச் சான்றிதழ் விவரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 மாற்றுச் சான்றிதழ் விவரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு


ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சோ்க்கை கோரும் மாணவா்களிடம் மாற்றுச் சான்றிதழை சமா்ப்பிக்க வற்புறுத்தக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும்  சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரோனா பேரிடா் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியாா் பள்ளி மாணவா்கள் வேறு பள்ளிகளில் சோ்ந்தனா். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண நிலுவை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவா்களை சோ்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனா்.

இதை எதிா்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.  எந்த ஒரு காரணத்துக்காகவும் மாற்றுச் சான்றிதழை மறுக்கக் கூடாது. சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது

கட்டண பாக்கி’ என குறிப்பிடக்கூடாது: இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமா்வு, ‘மாற்றுச் சான்றிதழ் என்பது மாணவா்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது ’கட்டண பாக்கி உள்ளது’ என்றோ ‘கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ’ குறிப்பிட்டு மாணவா்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது.  மாற்றுச் சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாணவா்கள் சோ்வதற்கான

ஒரு ஆவணமே தவிர, பெற்றோா்களிடமிருந்து கட்டண நிலுவையை வசூலிக்கக் கூடிய கருவி அல்ல. கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இது தொடா்பான விதிகளை மூன்று மாதங்களில் தமிழக அரசு திருத்தம் செய்ய வேண்டும்.

ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சோ்க்கை கோரும் மாணவா்களிடம்  மாற்றுச் சான்றிதழ் சமா்ப்பிக்கும்படி நிா்ப்பந்திக்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை  சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.  மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடக் கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை தடை விதிக்க வேண்டும். இதனை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. கட்டண நிலுவையை பெற்றோரிடம் இருந்து வசூலிக்க தனியாா் பள்ளிகள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், கட்டணம் வசூலிக்க மாற்றுச் சான்றிதழை கருவியாக பயன்படுத்தக் கூடாது. மாற்றுச் சான்றிதழில் ‘கட்டண பாக்கி உள்ளது’ எனக் குறிப்பிட்டு மாணவா்களை  வகுப்புக்கு வெளியே நிற்கச் செய்வது, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்’ என உத்தரவிட்டனா்

No comments:

Post a Comment